
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு வழங்கும் வகையில், பட்டதாரி வாலிபர் ஒருவர் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அசோக்குமார் மகன் அசோக் சரவணன் (32), பொறியியல் பட்டதாரி. இவருக்கும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்ற வர்ஷினிக்கும் வரும் செப்டம்பர் 17-ம் தேதி சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை வழங்க வேண்டும் என அசோக் சரவணன் கடந்த 2 மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக லண்டனில் வசிக்கும் தனது சகோதரி உதவியுடன் சுவிட்சர்லாந்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, நிலவில் நிலம் வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.23 ஆயிரம் செலுத்தி, நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியதாக அசோக் சரவணன் தெரிவித்துள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சார்பில் 10 பக்கங்கள் கொண்ட ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வருங்கால மனைவிக்காக நிலவில் நிலம் வாங்கிய தகவல் அப்பகுதியில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் இதுகுறித்து பேசி வருகின்றனர்.
இதுகுறித்து அசோக் சரவணன் கூறுகையில், உலகில் யாரும் வழங்காத வகையில் தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியதாக தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் நிலவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால், தான் வாங்கியதாக கூறப்படும் நிலத்தை நேரில் சென்று பார்வையிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.