
ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மையம் சார்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மைய நிறுவனத் தலைவர் சிவலிங்கன் தலைமை வகித்தார். இதில் பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், நீண்ட காலமாக நாமகிரிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், பட்டா கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து சிவலிங்கன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீண்ட காலமாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராடி வருவதாக தெரிவித்தார்.
பட்டா இல்லாததால் நிரந்தரமாக ஒரு இடத்தில் வசிக்க முடியாமல், ஆண்டுக்கு ஒரு இடம், மாதத்திற்கு ஒரு இடம் என குடிபெயர்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
வீட்டுமனை பட்டா கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.