செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாவட்ட யோகா சங்கம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான யோகா போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் யோகா வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நாமக்கல் – பரமத்தி ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர்.
போட்டியில் பங்கேற்றவர்களின் உடல் நெகிழ்வுத்தன்மை, சமநிலை, ஒருமுகத் தன்மை மற்றும் யோகாசனங்களை துல்லியமாக செய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் மதிப்பீடு செய்தனர்.
நிகழ்ச்சியில், யோகா பயிற்சியால் உடல் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பது, மனஅழுத்தம் குறைவது, இரத்த ஓட்டம் சீராகுவது, நுரையீரல் செயல்பாடு மேம்படுவது, உடல் எடை கட்டுப்பாட்டில் இருப்பது மற்றும் மன ஒருமுகத் தன்மை வளர்வது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட நாமக்கல் மாவட்ட அணி, இராணிப்பேட்டையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ளது என மாவட்ட யோகா சங்கத் தலைவர் பாண்டியராஜன் தெரிவித்தார்.