செய்தியைக் கேட்க / Listen to News
தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு விதித்துள்ள தடையை வரவேற்பதாகவும், இந்தத் தடையை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி தெரிவித்தார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பது, கடந்த 10 ஆண்டுகளாக மணல் லாரி உரிமையாளர்கள் முன்வைத்து வந்த கோரிக்கையாகும். அந்த கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தடை காரணமாக, தமிழகத்தில் எம்.சாண்ட் (M-Sand) மற்றும் பி.சாண்ட் (P-Sand) விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், உரிய அனுமதியின்றி கனிமங்கள் பிற மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.
தமிழக அரசு கனிம வளங்களை பாதுகாக்கும் வகையில் நேர்மையாக செயல்பட்டு வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் தமிழகத்தில் புதிதாக 6 மணல் குவாரிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மணல் விற்பனையில் இடைத்தரகர்களின் தலையீட்டை தவிர்க்க, ஆன்லைன் முறையில் நேரடியாக மணல் விற்பனை செய்யும் நடைமுறையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.