செய்தியைக் கேட்க / Listen to News
ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்படுகையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் தீமைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது இந்து சமய நம்பிக்கையாக உள்ளது.
இதையொட்டி மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பிண்டம், எள் உள்ளிட்டவற்றை வைத்து தர்ப்பணம் செய்தனர்.
தொடர்ந்து முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பக்தர்கள், தங்களது குலதெய்வங்களையும் வழிபட்டனர். பின்னர் புதிய ஆடைகளை அணிந்து அருகிலுள்ள சிவன் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து தோஷங்கள் நீங்க வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி ஆற்றில் அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டதால், ஆற்றுப்பகுதியில் பக்தி நிறைந்த சூழல் நிலவியது