32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

5 ஏக்கர் விவசாய நிலம் மோசடியாக அபகரிப்பு? – எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி மனு

Editor Published: August 6, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பச்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயியும், ஜவ்வரிசி ஆலை உரிமையாளருமான செங்கோட்டையன், தனது 5 ஏக்கர் விவசாய நிலம் மோசடி மூலம் அபகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, குடும்பத்துடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் மனு அளித்தார்.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

தொழில் தேவைக்காக திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் தனது 5 ஏக்கர் விவசாய நிலத்தை அடமானமாக வைத்து ரூ.20 லட்சம் கடன் பெற்றதாகவும், அந்த நிலம் இதுவரை தங்களது அனுபவத்திலேயே இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், கடன் தொகையை வழங்கும் நோக்கில் ரூ.60 லட்சம் வழங்கியதாகவும், பணம் வாங்கிய நபர்  உயிரிழந்த நிலையில், அவரது மகன்கள் , தங்களது 5 ஏக்கர் நிலத்தை வேறு ஒருவரின் பெயரில் மோசடியாக கிரயம் செய்து அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை தவறாக பயன்படுத்தி, நிலத்தில் இருந்த பயிர்களை அழித்து கம்பிவேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும், சில அரசு அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து, புகார் அளித்ததற்காக மிரட்டல் விடுப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது தாங்கள் வசித்து வரும் வீடு மற்றும் ஜவ்வரிசி ஆலையையும் அபகரிக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், எனவே இந்த வழக்கை உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்காமல், உயர் அதிகாரி தலைமையில் சுயாதீன விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது குடும்பத்திற்கு காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

About The Author

உடனடி செய்திகள்