செய்தியைக் கேட்க / Listen to News
இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில் இல்லந்தோறும் மூவர்ணக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பேரணியை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இரா. இந்திரா தொடங்கி வைத்தார். இதில் அஞ்சல் கோட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூவர்ணக் கொடிகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.
பேரணி டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, பேருந்து நிலையம், மோகனூர் சாலை வழியாக சென்று மீண்டும் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நிறைவடைந்தது. வழியெங்கும் பொதுமக்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, “ஹர் கர் திரங்கா” மற்றும் “வந்தே மாதரம்” 150-வது ஆண்டு நினைவு நிகழ்வுகளை முன்னிட்டு, நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி ஸ்டாண்டில் மூவர்ணக் கொடியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.
பொதுமக்கள் தேசியக்கொடியை வாங்கி தங்களது இல்லங்களில் ஏற்றி சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இரா. இந்திரா கேட்டுக்கொண்டார். நாமக்கல் தலைமை அஞ்சலகம் உள்ளிட்ட அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் துணை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.