செய்தியைக் கேட்க / Listen to News
லாரி உரிமையாளர்களுக்கு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாமக்கல்லில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடன் தவணை வசூலின்போது நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் அருள், கடன் தவணை செலுத்தாத லாரிகளை வெளிமாநிலங்களுக்கு சென்று ஆட்களை வைத்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை நிதி நிறுவனங்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். தவணை செலுத்த முடியாத லாரி உரிமையாளர்களிடம் சங்கம் மூலம் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவதற்கான நிறுவனங்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.