செய்தியைக் கேட்க / Listen to News
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, நாமக்கல்லில் இன்று தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அண்ணா சிலையில் இருந்து காலை 8 மணிக்கு தொடங்கிய அமைதிப் பேரணி, பரமத்தி ரோட்டில் உள்ள கருணாநிதி சிலை வரை நடைபெற்றது. பின்னர், கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் சி. மணிமாறன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் மா. மதிவேந்தன், நாமக்கல் மாநகராட்சி மேயர் து. கலாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. பெ. இராமலிங்கம், நகர செயலாளர்கள் ஆனந்த், செ. பூபதி, அ. சிவக்குமார், ஒன்றிய செயலாளர் வி.கே. பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, வார்டு மற்றும் கிளைக் கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்கள், நகரங்கள், பேரூராட்சிகள், வார்டுகள் மற்றும் கிளைக் கழகங்களிலும் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு துண்டு வழங்கி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.