செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நோக்கில், நாமக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் 5 கிலோமீட்டர், 4 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் மற்றும் 1 கிலோமீட்டர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக், வணிகவரித் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திலீப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 மற்றும் ரூ.500 என பல்வேறு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.