செய்தியைக் கேட்க / Listen to News
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்ற பேரணி, “REJECT MODI DELIMITATION – நியாயமான பிரதிநிதித்துவத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்றது. தமிழகத்தின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நியாயமான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய பேரணி, உழவர் சந்தை அருகே உள்ள காந்தி சாலை வரை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கருப்பு பலூன்களை கைகளில் பிடித்தும் அமைதியான முறையில் பேரணியாக சென்றனர். தொடர்ந்து காந்தி சிலை அருகே பேரணி நிறைவடைந்தது.
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகிகள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், NSUI, சேவாதளம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.