அதிமுகவில் நிலவி வந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிழலாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். எடப்பாடியைப் பிரிந்து வேலுமணியுடன் கைகோர்த்துள்ள தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் இழுக்கத் திட்டமிட்டுள்ளது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் என அசைக்க முடியாத சக்தியாக இருந்த தங்கமணி, சமீபகாலமாக கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவிக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி அணியுடன் இணைந்து செயல்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இது வெறும் நீக்கம் மட்டுமல்ல, எடப்பாடி அணிக்கு எதிராக வேலுமணி – தங்கமணி என்ற புதிய கூட்டணி உருவாகியிருப்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எடப்பாடி அணியிலிருந்து விலகித் தனி அணியாகச் செயல்படும் வேலுமணியுடன் இணைந்து, தங்கமணி புதிய வியூகங்களை வகுத்து வருகிறார்.
தங்கமணி நீக்கப்பட்ட கையோடு, நாமக்கல் மாவட்ட அதிமுகவை அப்படியே தங்கள் பக்கம் கொண்டு வர வேலுமணி அணியினர் ‘ஆபரேஷன் நாமக்கல்’ என்ற திட்டத்தில் இறங்கியுள்ளனர். தங்கமணியின் செல்வாக்குள்ள இந்த மாவட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை உடைப்பதே இவர்களின் நோக்கம்.
தங்கள் அணியின் பலத்தை நிரூபிக்க, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நகர செயலாளர்களை வளைக்கும் பணியில் வேலுமணி அணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் அதிகாரங்களைக் காட்டி நிர்வாகிகளை ஈர்க்கின்றனர்.
மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்குப் பெரும் தொகை ‘ஆஃபர்’ செய்யப்பட்டு, ஒருவிதமான ”குதிரை பேரம்” அரங்கேறி வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.
“தங்கமணி எங்கள் தலைவர், அவர் எங்கே இருக்கிறாரோ அங்கே தான் நாங்கள் இருப்போம்” எனச் சில நிர்வாகிகள் கூறினாலும், பல நிர்வாகிகள் எடப்பாடி அணியா அல்லது தங்கமணி-வேலுமணி கூட்டணியா எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், அவரது வலது கரங்களாக இருந்தவர்களே தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியிருப்பது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கமணியைத் தூக்கியதன் மூலம் எடப்பாடி தனது அதிகாரத்தைக் காட்ட முனைந்தாலும், வேலுமணி அணியின் ‘குதிரை பேர’ உத்திகள் நாமக்கல் அதிமுகவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் தவெக-வின் வருகையும், அதிமுகவின் இந்த உள் குத்து மோதல்களும் நாமக்கல் மாவட்ட அரசியலையும் அடுத்த சில நாட்களுக்கு அனல் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
