செய்தியைக் கேட்க / Listen to News
திருச்செங்கோட்டில் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக ஈரோடு ரோட்டில் பெரிய பள்ளம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளுக்கு பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை திருச்செங்கோடு – ஈரோடு ரோட்டில் வேளாளர் காலனி பகுதியில் அமைந்துள்ள பிரதான குடிநீர் குழாயில் அதிக அழுத்தம் காரணமாக திடீரென வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் அதிக அழுத்தத்துடன் தண்ணீர் வெளியேறி, ரோடு கடுமையாக சேதமடைந்தது. மேலும், நடுரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, வெடித்த பழைய சிமெண்ட் குழாயை அகற்றி புதிய குழாய் பொருத்தும் பணியும், சேதமடைந்த ரோட்டை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் நடைபெற்று வருவதால், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.