செய்தியைக் கேட்க / Listen to News
திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரியில் நள்ளிரவு நேரத்தில் மருத்துவக் கழிவுகள், மதுபானப் பாட்டில்கள் மற்றும் உணவுக் கழிவுகளை மினி ஆட்டோவில் கொண்டு வந்து கொட்டியதாகக் கூறப்படும் இருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கூட்டப்பள்ளி ஏரியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகள், மதுபானக் கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகளை கொட்டி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு குப்பைகளை கொட்ட வந்த மினி ஆட்டோவை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் இருந்த இருவரையும் பிடித்து போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு டவுன் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் திருச்செங்கோடு அருகே ஏமப்பள்ளி அக்கம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத் (எ) சரத்குமார் (29) மற்றும் கருவேப்பம்பட்டியைச் சேர்ந்த தனுஷ் (25) என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதில் சரத்குமார், திருச்செங்கோடு நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தவர் என்றும், கடந்த சில நாட்களாக பணிக்கு செல்லாமல் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் கூறுவதன்படி, பிடிபட்ட இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்த பிறகு மறுநாள் வருமாறு கூறி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், குப்பைகளுடன் இருந்த மினி ஆட்டோவை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டப்பள்ளி ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ‘பயோ மைனிங்‘ திட்டத்தின் கீழ் குப்பைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், மீண்டும் இதுபோன்று கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீர்நிலைகளை மாசுபடுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகளை கொட்டுபவர்கள் மீது காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.