
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 37 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அலுவலக நுழைவாயில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்ரஹாரம் ஊராட்சியின் செங்காடு, உருளிக்காடு, வண்ணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 37 குடும்பங்களை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், அரசாணை எண் 4551/2022-ன் அடிப்படையில் தங்களை வாடகைதாரர்களாக அங்கீகரித்து, வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், நீண்ட காலமாக அப்பகுதியில் குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளை காலி செய்ய தொடர்ந்து நெருக்கடி அளித்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
எனவே, பல ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பங்களை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, அவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.