செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு, மாநில தலைவர் ரவீந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நல்லா கவுண்டர், மாவட்டச் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இலவச மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும், காவிரி–திருமணிமுத்தாறு திட்டத்தை செயல்படுத்தி ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும், வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமைச் சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும், சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை தவிர்க்க வேண்டும், வேளாண் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும், மரவள்ளிக்கிழங்குக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
திருச்செங்கோடு நகராட்சி கழிவுநீர் கூட்டப்பள்ளி ஏரி வழியாக காவிரி ஆற்றில் கலப்பதை தடுத்து, கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும். மேலும், திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை அரசு நிதியுதவியுடன் புனரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரவீந்திரன், விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பாக கடந்த 7-ம் தேதி சென்னையில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மேலும் ஒரு கட்ட கடன் தள்ளுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளை அழைத்து குறைகளை கேட்க அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க, கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், நாமக்கல் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகளை நிரப்ப காவிரி உபரி நீரை கால்வாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ரவீந்திரன் வலியுறுத்தினார்.
மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.