செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் பார்மசி கல்லூரி விடுதி அறையில் 3-ம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரேச்சல், குமாரபாளையம் எக்ஸல் பார்மசி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக வகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதிய உணவுக்குப் பிறகு அறைக்குச் சென்ற ரேச்சல், மாலை வரை வெளியே வரவில்லை. இதையடுத்து சக மாணவிகள் அறைக்குச் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது ரேச்சல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த குமாரபாளையம் போலீசார், பள்ளிபாளையம் டிஎஸ்பி கௌதமன் தலைமையில் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மாணவியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் நோட்டில் காதலனுக்கு ரத்தத்தால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.