
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்டகால பாரம்பரியம் உள்ளதாகவும், விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்ய வேண்டியவை
- சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும்.
- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அலங்காரப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
- நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும்.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்த வேண்டும்.
- துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய அலங்கார துணிகளை பயன்படுத்த வேண்டும்.
- பிரசாதம் வழங்க மக்கும் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்த வேண்டும்.
- குப்பைகளை பொறுப்புடன் தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.
- எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
- அலங்காரப் பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்காக சேமித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
செய்யக்கூடாதவை
- பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்தக் கூடாது.
- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
- நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை சிலைகளுக்கு பயன்படுத்தக் கூடாது.
- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்தக் கூடாது.
- வண்ணப்பூச்சுகள் மற்றும் நச்சு ரசாயனங்கள் கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் அலங்காரப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- பண்டிகையின்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்தக் கூடாது.
- குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்ற முறையில் கொட்டக் கூடாது.
- அனுமதி இல்லாத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது.
- இழை விளக்குகள் (ஃபிலமென்ட் பல்புகள்) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- ஒருமுறை பயன்படுத்தும் அலங்காரப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
விநாயகர் சதுர்த்தி விழாவை பக்தியுடன் கொண்டாடுவதுடன், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.