
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வானி சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சாதிய பாகுபாடு மற்றும் சமூக அநீதிக்கு எதிராக குரல் எழுப்பிய ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராகவும், காவல்துறை நடவடிக்கைக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.