ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு, ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகன் மற்றும் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிறப்பு பூஜைகளில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து பாலமுருகனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.