
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலின் உள் பிரகாரத்தில் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமராக்களை கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. இந்த நடைமுறை வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயிலின் உள் பிரகாரத்தில் செல்போன் மற்றும் கேமராக்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்களின் வசதிக்காக கோயில் நுழைவு வாயில்களில் செல்போன் மற்றும் கேமராக்களை பாதுகாப்பாக வைப்பதற்கான பிரத்யேக லாக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களை லாக்கரில் ஒப்படைத்துவிட்டு தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்ததும் மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த நடைமுறைக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோயில் உதவி ஆணையர் சின்னதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.