
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
படுகை அணை நுழைவாயில் எதிரே நடைபெறும் போராட்டத்திற்கு நாமக்கல் மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன் தலைமை வகித்து வருகிறார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால், அதன் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ராஜவாய்க்காலில் தாமதமின்றி தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரனும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தினார்.