சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியைச் சேர்ந்த நடேசன் (60), அவரது மனைவி அமுதா (52), மகன் பிரவீன் (32), மருமகள் கோமதி (31) மற்றும் பேரன்கள் ஜிவித் (3), நிஜித் (2) ஆகிய 6 பேரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் அருகே வையப்பமலை பகுதியில் உள்ள குலதெய்வக் கோவிலுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை பிரவீன் ஓட்டிச் சென்ற நிலையில், மூலப்பள்ளிபட்டி அருகே எதிரே வந்த லாரியுடன் கார் மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.
விபத்தில் காரில் பயணம் செய்த அமுதா மற்றும் அவரது 2 வயது பேரன் நிஜித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நடேசன், பிரவீன், கோமதி மற்றும் 3 வயது குழந்தை ஜிவித் ஆகிய 4 பேரும் மீட்கப்பட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.