vmtalks.com ⚡ AMP

குதிரை பேரத்திற்கு இடமில்லை; நீட் தேர்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: திருச்செங்கோட்டில் அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்

By Editor | May 17, 2026

“குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை; நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என திருச்செங்கோட்டில் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருச்செங்கோடு வந்த த.வெ.க., மாநில கொள்கை பரப்பு பொதுச் செயலாளரும், அமைச்சருமான அருண்ராஜ், கூட்டப்பள்ளி மற்றும் ஏமப்பள்ளி ஏரிகளை ஆய்வு செய்தார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கூட்டப்பள்ளி ஏரியில் குப்பைகளை அகற்றுவது மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, “குடியிருப்புப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை ஏற்படும் என்பதால் அதனை மக்கள் வசிக்காத பகுதிக்கு மாற்ற வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “இது குறித்து பொதுமக்களிடம் அறிவியல் பூர்வமாக விளக்கமளித்து, ஆலோசனைகளைக் கேட்ட பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:

த.வெ.க., பெற்ற வெற்றி 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வரலாற்றுச் சாதனை. இது தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைக்கு மக்கள் அளித்த தீர்ப்பு. தேர்தல் வாக்குறுதிப்படி, முதற்கட்டமாக கூட்டப்பள்ளி ஏரி ‘பயோ மைனிங்’ முறையில் தூய்மைப்படுத்தப்படும். சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவன் மற்றும் த.வெ.க., நிர்வாகிகளின் பங்களிப்போடு இப்பணி நடைபெறும்.

மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை தற்போது அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வராதவர்களுக்கு விரைவில் வந்து சேரும்.  எமது சமூக நீதி கொள்கைக்கு ஆதரவளித்து கம்யூனிஸ்ட், ஐ.யு.எம்.எல்., வி.சி.க., போன்ற கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதில் குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் ஒத்துழைத்தாலும், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வு நாடு முழுவதும் சாத்தியமற்றது. கல்வி, மருத்துவம் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள், செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் துர்கா மூர்த்தி, விமலா, எம்.எல்.ஏ.,க்கள் திலீப், சந்திரசேகர் மற்றும் வருவாய்த் துறை, மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

நகராட்சி குப்பைக் கழிவுகளால் மாசடைந்துள்ள கூட்டப்பள்ளி ஏரியை பையோ மைனிங் முறையில் தூய்மை செய்து தூர்வாருவது குறித்தும் கழிவு நீர் சுத்திகரிப்புநிலையம் அமைப்பது குறித்தும் பொதுமக்களின் கருத்துகளை அமைச்சர் அருண்ராஜ் கேட்டறிந்தார்.