ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைக்கிணறு, ராமநாதபுரம், மத்துரூட் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பட்டா, சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது, பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக வழங்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வோம் என பொதுமக்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அரசு பொறுப்பேற்று சிறிது காலமே ஆகியுள்ள நிலையில், கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தற்காலிகமாக குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தார். இதுகுறித்து இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன், நாரைக்கிணறு சுற்றுவட்டார மக்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விளம்பரம்
VMTalks In-article Ad Slot