ராசிபுரம் அருகே பாச்சல் ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்துச் சென்றதாக கூறி, 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாச்சல் பகுதியில் சுமார் 182 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க சில விவசாயிகள் அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக ஏரியில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், அரசிடம் அனுமதி பெற்று எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படாமல், தனியார் இடங்களில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து இன்று ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்துச் சென்ற 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை சிறைபிடித்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்காணிப்பு அதிகாரி மற்றும் அனுமதி பெற்ற விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விவசாய பயன்பாட்டிற்காக அனுமதி பெறப்பட்ட வண்டல் மண், வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் பாச்சல் ஏரிப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.