ராசிபுரம் நகரில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஜாகீர் உசேன் சாலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு இரவு வீட்டில் தூங்கச் சென்றுள்ளனர். நள்ளிரவில் சுமார் 3 மர்ம நபர்கள் மற்றொரு இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளனர்.
பின்னர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் பூட்டுகளை உடைத்து, அடுத்தடுத்து 3 வாகனங்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2.50 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளில், மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்து அவற்றை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.