vmtalks.com ⚡ AMP

ப.வேலூரில் பெண்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி: 50 பேருக்கு வாய்ப்பு.

By Editor | Aug 26, 2026

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், நாமக்கல் மாவட்டம் ப.வேலூரில் பெண்களுக்கான இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது.

அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், தொழில் தொடங்க ஆர்வமுள்ள 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 50 பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு மாத கால இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ப.வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இப்பயிற்சியில் தையல் பயிற்சியுடன், துணி மற்றும் சணல் பொருட்களை பயன்படுத்தி லேப்டாப் பேக், பேபி பெட், ஷாப்பிங் பேக், மணி பர்ஸ், ஃபைல் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், சந்தைப்படுத்துதல், தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு மானியத் திட்டங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 88258 12528 என்ற எண்ணிற்கு தங்களது பெயர் மற்றும் முகவரி விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர்களுக்கான பயனாளிகள் தேர்வு நேர்முகத் தேர்வு வரும் 31-ம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.