vmtalks.com ⚡ AMP

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

By Editor | Aug 13, 2026

டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து நாமக்கல்லில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுபான சில்லரை விற்பனை கடை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மேலும், மதுபான சில்லரை விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், ஆன்லைன் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும், அரசின் கொள்கை முடிவால் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

பணியின்போது உயிரிழக்கும் டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு பணி வழங்க வேண்டும் என்றும், கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கடை வாடகை, மின் கட்டணம், இறக்கு கூலி, மதுபான சேதாரம் உள்ளிட்ட கூடுதல் செலவினங்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க ஊழியர்களை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும், பணிக்கொடை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

மேலும், ஊழியர்களின் போக்குவரத்து செலவு மற்றும் பணியின்போது ஏற்படும் அத்தியாவசிய செலவுகளுக்கு தொகை வழங்க வேண்டும், கடைகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் மாதாந்திர ரீசார்ஜ் வசதி ஏற்படுத்த வேண்டும், வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுப்பு அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.