நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருணிடம், மோகனூர் அடுத்த பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (47) அணுகி, குறைந்த வட்டியில் ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பிய அருணிடம், கடன் தொகைக்கான ஆவணங்கள் மற்றும் செயல்பாட்டுக் கட்டணம் எனக் கூறி ரூ.2.75 கோடி பணத்தை செந்தில்குமார் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், பணத்தை பெற்ற பிறகு கடன் தொகையை பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இதையடுத்து அருண் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், செந்தில்குமார் இதேபோல் மேலும் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட செந்தில்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.