அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டினால், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறிதளவு விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் கெளமாரி சுதாகர் தெரிவித்தார்.
நாமக்கல் மாநகர ஹோட்டல் வியாபார சங்கத்தின் 4-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கெளமாரி சுதாகர், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சில ஹோட்டல்கள் மூடப்பட்டன. தற்போது சிலிண்டர் விலை படிப்படியாக குறைந்து வருவதால், மூடப்பட்ட ஹோட்டல்கள் மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது பல ஹோட்டல்கள் டீசல் மற்றும் விறகு அடுப்புகளை மாற்று ஏற்பாடாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், எதிர்காலத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
அரிசி உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள போதிலும், வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்து வருகிறோம். அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டினால், உணவுப் பொருட்களின் விலையை சிறிதளவு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
மேலும், ஹோட்டல்களுக்கான சொத்துவரி உயர்வை குறைக்க வேண்டும், தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது போல் ஹோட்டல்களுக்கும் குறைந்த மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், ஹோட்டல் தொழிலை தொழில்துறையில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை எளிதாக சந்தித்து பிரச்சினைகளை தெரிவிக்க முடிவதாகவும், கோரிக்கைகளை அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதாகவும் கெளமாரி சுதாகர் தெரிவித்தார்.