வங்கி துறையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணிபுரியும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள பாகுபாடுகளை நீக்கி நியாயமான முறையில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை (11.09.2026) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி முன்பு 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 நாட்கள் பணி முறையை அமல்படுத்த கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில், வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி என்ற முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உள்ள பாகுபாடுகளை நீக்கி, அனைத்து ஊழியர்களுக்கும் நியாயமான முறையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக கண்டன முழக்கங்களை எழுப்பிய வங்கி ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தொடர்ந்து, நாளை நடைபெற உள்ள நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.