vmtalks.com ⚡ AMP

நாமக்கல்லில் அங்கன்வாடி மையங்களுக்கு கெட்டுப்போன, எடை குறைவான முட்டைகள்? – ஊழியர்கள் புகார்

By Editor | Aug 12, 2026

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போன நிலையிலும், நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட குறைவாகவும் விநியோகிக்கப்படுவதாக அங்கன்வாடி ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வந்த முட்டைகளில் சில கெட்டுப்போன நிலையிலும், எடை குறைவாகவும் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மேலும், வாரந்தோறும் கெட்டுப்போன முட்டைகள் அதிகளவில் வருவதாக அங்கன்வாடி ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக நாமக்கல், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் எடை குறைவான மற்றும் கெட்டுப்போன முட்டைகள் அதிகளவில் விநியோகிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசு நிர்ணயித்துள்ள எடையில் முட்டைகள் வழங்கப்படாமல், மிகச்சிறிய அளவிலான முட்டைகளே விநியோகிக்கப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர்கள் பலமுறை மாவட்ட திட்ட அலுவலரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் எடை குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற முட்டைகள் விநியோகிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.