நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோடு ஆர்டிஓ ஆபீசில் நடைபெற்றது.
ஆர்டிஓ லெனின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விழாக்கால பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த ஆண்டுக்கான தேரோட்ட நிகழ்வுகள் பின்வருமாறு நடைபெறவுள்ளன:
மே 16 (இன்று): மாலை 4:30 மணிக்கு பத்திரகாளியம்மன் திருத்தேர் இழுத்தல். மே 30: காலை 10:00 மணிக்கு விநாயகர் தேரும், மாலை 4:00 மணிக்கு செங்கோட்டு வேலவர் தேரும் வடம் பிடித்தல். மே 31 – ஜூன் 2: மூன்று நாட்களுக்கு அர்த்தநாரீஸ்வரர் (பெரிய தேர்) திருத்தேர் வடம் பிடித்தல். ஜூன் 2: பெரிய தேர் நிலை சேர்ந்தவுடன், மாலை 3:00 மணியளவில் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல்.ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அண்டை மாவட்டங்களான சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் கோவையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:
உணவு பாதுகாப்புத் துறையின் உரிய முன் அனுமதி பெறாமல் யாரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கக் கூடாது. நான்கு ரத வீதிகளிலும் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். காலை 10:00 – 1:00 மணி மற்றும் மாலை 4:00 – 6:00 மணி வரை மேற்கு மற்றும் தெற்கு ரத வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும். தேர் வருவதற்கு 100 மீட்டருக்கு முன்பாகவே நகராட்சி வாகனம் மூலம் காவல்துறை எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கிக் கொண்டே வரும். தேர் வரும் பாதையில் மின்கம்பிகளில் இருந்து மின் ஒயர்கள் அகற்றப்பட வேண்டும். பட்டாசு வெடிக்க போலீசார் அனுமதி கட்டாயம். எனத் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சின்னதுரை, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, டிஎஸ்பி கிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவி இன்ஜினியர் தினேஷ், உணவு பாதுகாப்புத் துறை ஆய்வாளர் அசோக் குமார் மற்றும் தீயணைப்புத் துறை, மின்வாரியம், வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள், அர்ச்சகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு தேர்த் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆர்டிஓ லெனின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.