திருச்செங்கோடு சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு கோலாகலமாக நடந்தது.
பிரதோஷத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு மங்கள திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு வகையான வண்ண மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சுகந்த குந்தலாம்பிகை சமேத கைலாசநாதர் எழுந்தருளினார். சிவபூதகண வாத்தியங்கள் முழங்க, ‘ஓம் நமச்சிவாய’ கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் சுவாமியைத் தங்கள் தோள்களில் சுமந்து கோயிலை வலம் வந்தனர்.
அப்போது, பிரதோஷ நாதரைத் தோளில் சுமந்த பக்தர்கள், சுவாமிக்குத் தாலாட்டு ஆடியபடி ஊர்வலமாகச் சென்றது அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சிவபுராணம் மற்றும் பல்வேறு சிவப் பாடல்களைப் பாடியபடி சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.
திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.