vmtalks.com ⚡ AMP

“மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – வீரபாண்டியன்.

By Editor | Aug 09, 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் பிரச்சார நடைபயணத்தின் ஒரு பகுதியாக, திருச்செங்கோட்டில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், நடைபயணத்தை தொடங்கி வைத்தார். 4 ரத வீதிகள் வழியாக நடைபெற்ற நடைபயணம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மு. வீரபாண்டியன், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும், மருத்துவம் மற்றும் கல்வியை அரசு பொறுப்பேற்க வேண்டும், ரேஷன் பொருட்கள் குறைக்கப்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்கள் பிரச்சார நடைபயணம் நடைபெறுவதாக தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தின் உள்ளூர் பிரச்சினைகள் குறித்து அவர் கூறியதாவது: எலச்சிபாளையம், பெரியமணலி பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீட்டுமனை கேட்டு போராடி வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி பகுதியில் பட்டா கேட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து பட்டா வழங்க வேண்டும்.

மேலும், மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம் என்றார்.

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்றும், மேகதாது அணை கட்டுவதை தடுக்கவும், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கை பெறவும் அனைத்து கட்சிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

மேலும், எதிர்பார்த்த அளவுக்கு பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்பது உண்மைதான். புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், போகப்போக பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.