vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோட்டில் பயோ மைனிங் மூலம் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்.

By Editor | Aug 07, 2026

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாணார்பாளையம் இடுகாட்டில் புதிய பயோ மைனிங் எந்திரம் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் நீண்ட காலமாக அணிமூர் உரக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. அப்பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பயோ மைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அதேபோல், கூட்டப்பள்ளி ஏரி, நெசவாளர் காலனி இடுகாடு மற்றும் சாணார்பாளையம் இடுகாடு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தேங்கியிருந்த குப்பைகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மொத்தம் 13,089 கன மீட்டர் குப்பைகளை அகற்றுவதற்காக சுமார் ரூ.3 கோடி மதிப்பில் பயோ மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணிமூர் உரக் கிடங்கு மற்றும் நெசவாளர் காலனி இடுகாடு பகுதிகளில் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ள நிலையில், கூட்டப்பள்ளி ஏரி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சாணார்பாளையம் இடுகாட்டில் போதிய இடவசதி இல்லாததால், சிறிய அளவிலான பயோ மைனிங் எந்திரம் மூலம் குப்பைகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான எந்திரம் தற்போது அங்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அதை அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் குமரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவடிவு, புவனேஸ்வரி, ரமேஷ், செல்விராஜ்வேல், திவ்யா வெங்கடேஸ்வரன், உதவி பொறியாளர் சத்யா நாகராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எந்திரத்தை இயக்க தேவையான மின் வசதி செய்யப்பட்டு, எந்திரம் செயல்படத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் சாணார்பாளையம் இடுகாட்டில் உள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்படும் என பயோ மைனிங் பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தினர் தெரிவித்தனர்