vmtalks.com ⚡ AMP

எலச்சிபாளையம் விபத்து நடந்த பகுதியில் சாலை தடுப்புகள் அமைப்பு.

By Editor | Sep 04, 2026

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த சக்கராம்பாளையம் பிரிவு பகுதியில் நேற்று மாலை தனியார் கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்தனர்.

விபத்து நடைபெற்ற பகுதி சாலை வளைவாக இருப்பதால், சக்கராம்பாளையம் பிரிவு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வரும் வாகனங்கள், அந்த வழியாக வேகமாக வரும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சரியாக தெரிவதில்லை என கூறப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதாகவும், விபத்துகளை தடுக்க வேகத்தடை அல்லது சாலை தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கோர விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் மற்றும் திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அப்பகுதி பொதுமக்கள் சாலை தடுப்புகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடைபெற்ற சக்கராம்பாளையம் பிரிவு பகுதியில் தற்போது இருபுறமும் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைத்து, எதிர்காலத்தில் விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.