vmtalks.com ⚡ AMP

சேந்தமங்கலம் ரவுண்டானாவை அழகுபடுத்தும் பணி தீவிரம்.

By Editor | Aug 20, 2026

சேந்தமங்கலம் பேரூராட்சியில் முக்கிய சந்திப்பாக விளங்கும் ரவுண்டானாவை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகே வண்டிப்பேட்டை பகுதியில் மூன்று வழிச்சாலை சந்திப்பு அமைந்துள்ளது. நாமக்கல், ராசிபுரம், புதுச்சந்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த வழித்தடம் உள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவுண்டானா அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சேந்தமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரவுண்டானாவை புதுப்பித்து அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி ரவுண்டானா பகுதியில் அலங்கார விளக்குகள், பசுமை புற்கள் மற்றும் அருவி போன்ற அலங்கார அமைப்புகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக ரவுண்டானா பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் தேவையற்ற செடிகளை அகற்றி, தூய்மைப்படுத்தும் பணிகள் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சந்திரசேகர், லெனின் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பணிகள் நிறைவடைந்த பின்னர் சேந்தமங்கலம் ரவுண்டானா புதுப்பொலிவுடன் காணப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.