vmtalks.com ⚡ AMP

தேசிய புகைப்பட தினம்: குமாரபாளையத்தில் புகைப்பட கலைஞர்கள் விழிப்புணர்வு வாகன பேரணி.

By Editor | Aug 19, 2026

தேசிய புகைப்பட தினத்தை முன்னிட்டு, குமாரபாளையத்தில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி தேசிய புகைப்பட தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடத்தப்பட்டது.

குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியை காவல் ஆய்வாளர் தாமரைச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் புகைப்பட கலைஞர்கள், போலீசார் மற்றும் பல்வேறு நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

பேரணி பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை வழியாக சென்று குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

இதுகுறித்து குமாரபாளையம் தாலுகா புகைப்பட கலைஞர்கள் சங்க செயலாளர் மாதேஷ்வரன் கூறுகையில், தேசிய புகைப்பட தினத்தை முன்னிட்டு சமூக அக்கறையுடன் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.